அவன் கல்லென்றால் நீ மரம்!




அவன் கல்லென்றால் நீ மரம்!

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்'
என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.

”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்

ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச்
சாடிச் சொல்கிறார்:

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:

”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”

முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------

கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!

தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

தகாத உறவைக் கண்டு பிடித்த தாய்!


தகாத உறவைக் கண்டு பிடித்த தாய்!

தன் மகன் மணிகண்டன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில்
அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.

இரண்டு பிள்ளைகளில் அவன் மூத்தவன். காலதேவன் கருணையின்றி அந்தத் தாய்க்கு
விதைவைக் கோலத்தைக் கொடுத்திருந்தான். மகனைக் கண்டித்துச் சொல்லவும்
முடியவில்லை.

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன்
தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்
கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை
பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்
ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.

பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!

தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு
வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.

வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும்
மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும்,
சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த
சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின்
சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க
முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.

தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. கவிதா
என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!"
என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும்
வைத்தான்.

ஒருவாரம் சென்றது.

ஒரு நாள் காலை, கவிதா, மணிகண்டனிடம், ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன்
அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு,
அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள்.

மணிகண்டன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம்
என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,

வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு
போனீர்கள் என்று நான் சொல்லவில்லை.
அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும்
தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!

நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!

இப்படிக்கு
அன்பு மகன்
மணிகண்டன்
-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, மணிகண்டனின் தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,

கவிதாவுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

கவிதா தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக
இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில்
நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்!
-----------------------------------------------------------------------------------------
நீதி: தாயிடம் பொய் சொல்லாதீர்கள்
அதிலும் அவள் இந்தியத் தாயாக இருந்தால் நிச்சயம் பொய் சொல்லாதீர்கள்!