அவன் கல்லென்றால் நீ மரம்!




அவன் கல்லென்றால் நீ மரம்!

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்'
என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.

”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்

ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச்
சாடிச் சொல்கிறார்:

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:

”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”

முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------

கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!

தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

0 comments:

Post a Comment